ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday 23 April 2013

வடை பறிப்பு - சாம் மார்த்தாண்டன்!!!


சமீப காலமாக பக்கிலீக்ஸில் அடிக்கடி பதிவுகள் வெளியாவதில்லை. காரணம் பெரிதாக எதுவும் இல்லை.. சமீபகாலமாக ஜெட்லி எழுதும் பதிவுகள் நேரடியாக எடிட் எதுவும் செய்யப்படாமலேயே  பக்கி லீக்ஸில் வெளியிடப்படும் அளவுக்கு நகைச்சுவை நயம் வாய்ந்தாக இருக்கின்றன. அவரை வைத்து அவரே அனைவருக்கும் வயிறு வலிக்கும் அளவு சிரிப்பு காட்டிக் கொண்டிருக்கும் போது வேறு ஒரு பதிவு எதற்கு? இருப்பினும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதோ ஜெட்லியின் காலத்தால் அழியா ஒரு பயண அனுபவத்தின் மறுபதிப்பு

காலையில் மிக முக்கிய வேலை காரணமாக எழும்பூர் நோக்கி
சென்று கொண்டு இருந்தேன்.அப்படி என்ன முக்கியமான வேலை என்கிறீர்களா?  என்னைப்போன்ற பிரபல பதிவர்களுக்கு காலையிலையே பசி எடுப்பது வழக்கம். எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள புகாரி ஹோட்டல் அருகே ஒரு ஆயா இட்லி கடை உள்ளது. அந்த ஆயா தினமும் காக்காய்க்கு வடை  வைப்பது வழக்கம்.காக்கைக்கு வைக்கும் வடையை வழக்கம்போல் திருடி திண்ணும் திறமையை வெளிப்படுத்த சென்றேன். (குறிப்பு: காக்கைகள் நம் முன்னோர் என்பதால் அவர்கள் உணவை திருடி திண்ணும்போது அவர்கள் அறிவு நமக்கு பரவுமே என்ற தொலைநோக்கு பார்வையுடனே இந்த செயலில் ஈடுபட்டுள்ளேன். என் போன்ற பிரபல பதிவர்களுக்குதான் இது போன்ற தொலைநோக்கு சிந்தனை இருக்கும்)

அங்கே ஆவலோடு சென்ற எனக்கு அதிர்ச்சி.அந்த ஆயா கடையை சுற்றி ஒரு பெரிய கூட்டம்....

என்னவென்று விசாரிக்கையில் பத்து நிமிடத்துக்கு முன்ன இந்த ஆயா கடையில காக்காவுக்கு  வச்சிருந்த வடையை பறிச்சிக்கிட்டு போயிட்டாங்க என்றார்... வேடிக்கை பார்த்தவர்..

எத்தனை வடை என்றேன்....

மூனு வடை....

ஒரு வடை 4 ரூபாய் என்றால் 9 ரூபாய் மதிப்பிலான மூனு வடைகளை பத்து நிமிடத்துக்கு முன்னால் அடித்துக்கொண்டு போய் இருக்கின்றார்கள்.. வருங்கால தூண்கள்...

அந்த ஆயா சேத்துப்பட்டில் குறுக்குத் தெருவுக்கு பின் பக்கம் இருக்கும் வீட்டில் தங்கி இருக்கின்றாராம்.. புகாரி ஹோட்டல் அருகே இட்லி கடை வைத்திருப்பதால் அந்த ஆயாவிற்கு புகாரி ஆயா என்ற பெயரும் உண்டு.ஆயா என்றாலும் தோற்றத்தில் பார்ப்பதற்கு என் கனவுகன்னி எம்.என்.ராஜத்தைப் போல் சார்மிங்காக, சிக்கென்று இருப்பார்.அதே போல் நெற்றியில் பெரிதாக ஒரு பொட்டு வைத்திருப்பார்.

(பொட்டு என்றதும் தான் ஞாபகம் வருகிறது.ஒரு முறை அந்த ஆயாவிடம் என் நீண்ட நாள் சந்தேகத்தை கூலாக கேட்டேன்,"ஏன் பாட்டி தினமும் நெத்தியில இவ்ளோ பெரிய பொட்டு வச்சிகிட்டு வரியே,உம் புருசன் இன்னுமா உசிரோட இருக்கான்? இது போல லாஜிக்கல் ஃகொஸ்டின்ஸ் கேட்பது என் போன்ற சிந்தனையாளர்களுக்கே உரிய பண்பு அதை புரிந்துக்கொள்ளாத அந்த ஆயா,"அட கட்டையில போறவனே,ஓசி இட்லி திங்கிற நாய்க்கு லவுட்டப் பாரு என்று கூறி தண்ணியை மூஞ்சியில் ஊற்றினார். சென்னை சூட்டுக்கு  இதமாக இருந்தது.அது ஒரு புதிய அனுபவம்)

 வியாபாரத்திற்கு கிளம்பியபோது நெற்றியில் வைத்த பொட்டு ஈரம் காய்வதற்குள் மூன்று வடையை பறிகொடுத்து விட்டு மலங்க மலங்க விழிக்கும் அந்த ஆயாவைபார்க்கையில் பரிதாபமாக இருந்தது.


கடை மூடும்  நேரம் வடையை  அடித்து விட்டான் என்றால் கூட மனம் சாந்தியடையும் .... நள்ளிரவு அதுவும் காலை ஒன்பதே முக்கால் மணிக்கு இட்லியை திருடி சென்று இருக்கின்றார்கள்.. இத்தனைக்கும் அது பிசியான கடை....

 அந்த ஆயாவின் நேரம்.,.. அந்த நேரத்தில் நான்  இல்லை  அந்த ஆயா குட்டி சுவற்றில் வடையை வைத்துவிட்டு வடை சட்டியை நோக்கி நடந்து வருகையில்  இந்த சம்பவம் நடந்து இருக்கின்றது...கெட்ட நேரம் நான் வர தாமதமாகிவிட்டது.இருந்திருந்தால் ஜெட்லி ஸ்டைலில் பறந்து குதித்து தாவி எழுந்து வடையை மீட்டெடுத்திருப்பேன். என்னுள் ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் வீரன் ஒளிந்திருப்பது என் நெருங்கிய வாசகர்களான ஜாக்கி சான், ஜெட் லீ, குங்ஃபூ பாண்டாவிற்கு கூட தெரியாது.

பவர்ஸ்டார் போன்ற ஒருவர் அந்த ஆயாவிற்கு  ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்...100க்கு அவர் சற்றுமுன்தான் டயல் செய்து இருக்கின்றார்... அவருக்கு பல இணைப்புகளில் இருந்து போன் வந்துக்கொண்டே இருந்தது....


 அந்த ஆயாவின் நெற்றியில் இருந்த அந்த பொட்டு லேசாக அழிந்திருந்தது... அதை அந்த ஆயா தடவி கூட பார்க்கவில்லை...


எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் இருந்து அந்த ஆயா மீளவில்லை., கூட்டம் சேர சேர ......டாமல் என்ற வெடித்து அழுதார்.. எனக்கு இன்னும் போனி கூட ஆகலை... நான் என்ன பண்ணறது என்று வெடித்து அழுதார்,...


போலிஸ் வந்தது அடுத்து ஏரியா இண்ஸ்பெக்டர் என்று போலிஸ் பட்டாளம் குவிய தொடங்கியது.. உண்மையில் காவல் துறையினரை பாராட்ட வேண்டும்..இட்லி ஸ்நாட்சிங் நடந்த கால் மணி நேரத்தில் அங்கே  எட்டு போலிஸ்காரர்கள் மாப்ட்டியில் நால்வர் என்று குவிந்தார்கள்..அதில் ஒருவர் என்னையே சந்தேகமாக பார்த்தார். காரணத்தை நான் உணர்வேன். என்னதான் நான் பிரபல பதிவர் என்றாலும் என் புகைபடத்தை அந்த ஏரியா இண்ஸ்பெக்டர் ஸ்டேசனில் ஒட்டியிருக்க கூடாது. அவரின் அளவுகடந்த அன்பே இது போன்ற சங்கடமான சூழ்நிலையில் என்னை அவ்வப்போது ஆழ்த்திவிடுகிறது.

ஆயாவை போலிஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து விட்டு தடயங்களை தேட ஆரம்பித்தார்கள்... பிளிஸ்  டிராபிக் ஆவுது... கொஞ்சம் கலைந்து போங்க என்று கோரிக்கை விடுத்தனர்..

நான் அந்த  ஆயா வலியை மீறி எனக்கு இன்னும் போனி ஆகலை என்று சொன்ன போது எனக்கு இந்த சமுகத்தின் கையாளாகாத்தனத்தின் மீது கோபம் கோபமாய் வந்தது... சின்ன சின்ன ஆசையாக வடை திங்க சென்ற எனக்கு ஏமாற்றம்...5 நிமிட பெண்டிங்கில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் தள்ளி போய்விட்டது. ..  வந்தவர்கள் ஆயா கடையில் கெட்டி சட்னி போன்ற வஸ்துகளை களவாடாமல் ஓடினார்களே என்று ஆறுதலாக இருந்தது.

குவிந்த  போலிசார் குற்றவாளிகளை பிடித்தால் படிகாட் முனிஸ்வரனுக்கு ஒரு சூரைதேங்காய் உடைக்கலாம்...இல்லையென்றால் என்போன்ற பிரபல பதிவர்களுக்கு எப்படி டிபன் கிடைக்கும்?? நடக்க பிரார்த்திப்போம்.

சென்ட்ரல் அருகே வந்து ஒரு டீ  சொன்னேன்...


எனக்கு இன்னும் போனி ஆகலை,... நான் என்ன பண்ணபோறேன் என்று தெரியலை என்று அழுதது நினைவுக்கு வந்தது

டீ யில் எந்த சுவையும் இல்லை..

டீ கிளாஸ் கழுவுன தண்ணியில எந்த சுவையும் இருக்காது நாயே எடத்த காலி பண்ணு என்று துரத்தினார் கடைக்காரர். அதுவும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அனுபவமாக அமைந்தது.